பகலில் வேலைக்காரி, இரவில் கொள்ளைக்காரி
மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட பெண் ஒருவரை நேற்று (26) செவ்வாய்க்கிழமை கையும் மெய்யுமாக பிடித்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக்க ஜெயவீர தெரிவித்தார்.
கைதானவர் 55 வயதான சங்கானையை சோ்ந்தவர். சங்கானை சேர்ச் வீதியில் கொள்ளை, சண்டிலிப்பாய் திருட்டு, சுதுமலையில் மதகுரு ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற நகை, பணம் திருட்டு, வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள ஆசிரியர் வீட்டில் இடம்பெற்ற திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் இவருக்கும் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வயது முதிர்ந்த தம்பதிகள் இருக்கும் வீடுகளுக்கு வேலை செய்வதற்கு செல்லும் இவர், அங்குள்ள நகைகள் மற்றும் பணம் தொடர்பில் திருடர்கள் மற்றும் கொள்ளையர்களுக்கு தகவல் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் திருடப்படும் நகை, பணத்தில் இவர்கள் பங்கு போட்டுக்கொள்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 2 சங்கிலிகள், ஒரு மோதிரம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. இவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் குற்றத்தடுப்பு பொலிஸார், மல்லாகம் நீதிமன்றின் உத்தரவுக்கமைய மேலும் சில நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.