பிணைமுறி அறிக்கையை ஆராய்ந்த பின்னனே நடவடிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணை அறிக்கை தொடர்பான நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் அதனை முழுமையாக ஆராயவுள்ளனர்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதியரசர் கே.ரி.சித்ரசிறி தலைமையிலான ஆணைக்குழு தமது அறிக்கையை நேற்று (30) கையளித்துள்ளது.
இந்நிலையில், விசாரணை அறிக்கை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்வதற்கு முன்னர், அறிக்கையை முழுமையாக ஜனாதிபதி செயலக அதிகாரிகள் ஆராயவுள்ளனர்என, இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த அறிக்கை விரிவான ஒன்று. அதிகாரிகள் இதனை ஆராய்வதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும். இந்த அறிக்கை, சாட்சியங்கள், இணைப்புகள், பரிந்துரைகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. 100 இணைப்புகளுடன் இந்த அறிக்கை மொத்தம் 1400 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.