மாணவர்களிடம் ஊடக அறிவை கட்டியெழுப்பும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஒருநாள் ஊடக செயலமர்வு, நேற்று சனிக்கிழமை (24) மாதம்பை அல் - மிஸ்பா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. அல் - மிஸ்பா முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் நஸ்ரியா மத்திய கல்லூரி போன்றவற்றில் க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தரங்களில் கல்விகற்கும் சுமார் 150 தமிழ், முஸ்லிம் மாணவ, மாணவிகள் ஊடக செயலமர்வில் கலந்துகொண்டனர்.
அமைப்பின் தலைவர் என்.எம். அமீன் ஊடகத்துறையில் மாணவர்களின் வகிபாகம் குறித்து ஆரம்ப உரை நிகழ்த்தினார். அதன்பின்னர் விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ் ஊடக அறிமுகமும், அதிலுள்ள பயிற்சிநெறிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பாகவும், தர்காநகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல் ஊடகத்துறையில் தமிழ் மொழி பற்றி விரிவுரை நிகழ்த்தினார்கள்.
அதன்பின்னர் ஊடகவியலாளர் பிறவ்ஸ் முஹம்மட் ஊடகத்துறையை கையாள்தல் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பாகவும், இலங்கை வானொலி அறிவிப்பாளர் ஹுனைத் எம். ஹாரிஸ் வானொலி ஊடகவியல் தொடர்பாகவும் விரிவுரை நடாத்தினார்கள். தொலைக்காட்சி செய்தியாளர் அஷ்ரப் ஏ. சமத் கமெரா நுட்பங்கள் பற்றி விளக்கமளித்தார்.
இதன்போது, மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. அத்துடன் முஸ்லிம் மீடியா போரத்தினால் ஒரு தொகுதி நூல்கள் அல் - மிஸ்பா முஸ்லிம் மகா வித்தியாலய நூலகத்துக்கு கையளிக்கப்பட்டன.
லேக் ஹவுஸ் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம்.ஏ.எம். நிலாம் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இச்செயலமர்வில், முஸ்லிம் மீடியா போரத்தின் உப செயலாளர்களின் ஒருவரான எஸ்.எம்.எம். முஸ்தபா மெளலவி, நவமணியைச் சேர்ந்த எம்.ஐ.எம். சாஹிர் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக சிலாபம் நகர சபை உறுப்பினர் ஏ.டபிள்யூ. சாஹுல் அமீன், சிலாபம் வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ் பிரிவு உதவிக் கல்வி பணிப்பாளர் அனிதா கமலேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.