A+ A-

பொய் வதந்தி பரப்பும் கைக்கூலி இணையத்தளங்களுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை.





ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழுபேரை சுட்டிக்காட்டி, “மில்லியன் 750 X 7 = ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்”  எனக்குறிப்பிட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரப்பட்டுள்ள வேளையில், சில இணையத்தளங்களிலும் ஏனைய சமூக ஊடகங்களிலும் பொய்யான வதந்தியை பரப்பி வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது பற்றி கட்சியின் சட்டத்தரணிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ராகித்த ராஜபக்ச என்பவர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்த மேற்படி பொய்யான வதந்தியை அதன் பாரதூரம் பற்றி அறிந்தவுடனேயே அவர் அப்புறப்படுத்தி விட்ட போதிலும், அதனை முஸ்லிம் காங்கிரசின் மீது சேறுபூசி வரும் சில கைக்கூலி இணையத்தளங்கள் தூக்கிப்பிடித்துக் கொண்டு மக்கள் மத்தியில் தவறான மனப்பதிவை ஏற்படுத்த எத்தனித்து வருகின்றன.
எனவே, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்து முறைகேடாக நடந்துகொள்ளும் இணையத்தளங்களை முடக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது என்பன தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகளின் கவனம் திரும்பியுள்ளது.