A+ A-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் மக்கள் தொடர்பாடல் காரியாலயம் திறந்து வைப்பு








பொத்துவில் பிரதேச சபை ஆட்சியை பலவிதமான நெருக்கடிகளுக்கு மத்தியில் கைப்பற்றியுள்ளோம். ஆனால் மாகாண சபையிலும், பாராளுமன்றத்திலும் அதிகாரமில்லை என்ற ஒரு நீண்ட குறைபாடு இருந்து வருகின்றது. அதிகாரத்தைக் கொடுப்பவர்கள் அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு கட்சியில் நிலைத்திருக்காமல் கட்சியை விட்டு மாற்றுக் கட்சிகளுக்கு சென்றுவிடுவது என்பதுதான் பெரியதொரு சாபக்கேடாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் மக்கள் தொடர்பாடல் காரியாலய திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை (27) பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் நடைபெற்ற பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அதிகாரம் நிரந்தரமாக இல்லையென்றால் மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து கொள்வது என்ற நிலைமை அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. கட்சி முன்னர் பொத்துவில்லுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை வழங்கியிருந்தது. இன்னுமொரு மாகாண சபை உறுப்பினருக்கான வாய்ப்பிருந்தது. ஆனால் அந்த வாய்ப்புகளுக்கு அப்பால் இந்த நிலவரம் நீடித்துக் கொண்டு போகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் நசீருக்கு நிபந்தனையொன்றை விதித்திருக்கின்றேன், மாகாண சபை தேர்தலில் அட்டாளைச்சேனைக்கான விருப்பு வாக்கொன்றை கட்டாயம் பொத்துவில்லுக்கு வழங்க வேண்டும். அது கட்சியின் கட்டளை. அதன் மூலமாக பொத்துவில்லுக்கான மாகாண சபை உறுப்பினர் ஒருவரைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படும்.

பொத்துவில்லை அபிவிருத்தி செய்வதற்காக 120 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கியிருந்தேன். அதிலும் 55 தொடக்கம் 60 மில்லியன் ரூபாவிற்கான வேலைகள் தான் நடந்திருக்கின்றன. மீதமுள்ள 50 மில்லியனை இந்த பொது சந்தைக்கு ஒதுக்கியிருந்தோம். அந்த 50 மில்லியன் கொண்டு இன்னமும் அபிவிருத்தி செய்யப்படவில்லை.

அது திறைசேரிக்கு திரும்பி சென்றுவிட்டது. அதை திரும்பப் பயன்படுத்த முடியாது. இந்த வருடம் அந்த 50 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும். சென்ற வருடம் ஒதுக்கப்பட்ட அந்த 50 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி அபிவிருத்தி செய்திருந்தால், இந்த வருடம் மேலும் 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருக்கலாம். ஆனால் இப்படியான துரதிர்ஷ;டம் நடந்தது விட்டது. இதற்கான காரணம் எங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் போனதுதான். அதேபோல் இந்த சந்தையிலுள்ள வியாபாரிகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எhல்.எம்.நசீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வறிய குடும்பங்களுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் எரிவாயு சமயல் அடுப்புகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எhல்.எம்.நசீர் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் அப்துல் வாசித், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் நபீல் அமானுல்லாஹ், பொத்துவில் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.