சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவது தொடர்பில் தீர்க்கமான முடிவை எட்டும் வகையில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சகல ஊர் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்குவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (26) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது. இதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;
கல்முனை மாநகர சபையை வெவ்வேறு உள்ளூராட்சி மன்றங்களாக பிரிப்பது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இதற்கான குழுக்களை அமைத்து, விரைவில் தீர்வொன்றை எட்டுவதற்கு அழுத்தம் கொடுத்திருந்தோம். அந்த வகையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் வஜிர அபேவர்த்தன எங்களை அழைத்துப் பேசினார்.
சாய்ந்தமருது, கல்முனை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடன் சேர்த்து மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனை தமிழ்பிரிவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து ஒன்றாகவும், தனியாகவும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
இந்தப் பேச்சுவார்த்தை மூலம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சகல தரப்பினருடனும் பேசி, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்பது குறிக்கு இன்று கலந்துரையாடினோம் என்றார்.
இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைச்சர் விஜிர அபேவர்த்தன தலைமையில், இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக விசேட உயர்மட்ட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன, அமைச்சர் றிஷாத் பதியுதீன், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். நசீர், எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.