A+ A-

பேராசிரியர் காதர் மொகிதீனின் மனைவியின் மறைவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனின் மனைவியான ஜி. லத்தீபா பேகம், தனது கணவரின் தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்லாது, பொது வாழ்விலும் அரசியல் வாழ்விலும் இணைபிரியாது அரும்பணியாற்றியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

பேராசிரியர் காதர் மொகிதீனின் மனையாள் லத்தீபா பேகம், நீண்டகாலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (30) புதன்கிழமை திருச்சியில் காலமான செய்தியைக் கேட்டு ஆழ்ந்த கவலையடைந்தேன்.

தனது அன்புக் கணவரைப் போலவே எளிமையான வாழ்க்கையை கடைப்பிடித்து, இறைவிசுவாசத்துடன் இஸ்லாமிய சன்மார்க்க கடமைகளிலும் தவறாது ஈடுபட்டுவந்த அவர், பாமர மக்கள் தொடக்கம் அரசியல் தலைவர்கள் வரை நன்கு மதிக்கப்படுபவராக திகழ்ந்தார்.

மறைந்த கலைஞர் மு. கருணாநிதி மற்றும் தற்போதைய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர், அரசியல்வாதிகள், அறிஞர்கள் மற்றும் அவருடன் மனம்விட்டு பழகிய அனைவரையும் விட்டு பிரிந்துவிட்டார். ஆனால், அவரது நினைவுகள் எல்லோரின் மனங்களிலும் நிலைத்திருக்கும்.

தனிப்பட்ட முறையிலும் எனது குடும்பத்தினர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும், அவரது மறைவினால் துயருற்றிருக்கும் பேராசிரியருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். தவிர்க்கமுடியாத காரணங்களினால் அவரது நல்லடக்கத்தில் கலந்துகொள்ள முடியாமைக்காக வருந்துகிறேன்.

எல்லாம் வல்ல இறைவன், அன்னாரின் பாவங்களை மன்னித்து, மறுமைநாளில் நிலையான ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவதற்கு பிரார்த்திக்கிறோம்.